பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி - புதிர்:

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி - புதிர்:

ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன.


ஓர் எலி எழுந்து, இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை. நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகிறது. நாம் அதனிடமிருந்து தப்பிக்க ஏதேனும் வழி கண்டாக வேண்டும் என்று உணர்ச்சியுடன் பேசியது.
கிழ எலி ஒன்று எழுந்து, நீ சொல்வது உண்மைதான். நாம் எல்லோரும் பூனைக்கு அஞ்சி அஞ்சித்தான் வாழ்கிறோம். அதனிடமிருந்து தப்பிக்க வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே, என்ன செய்வது? என்றது. அங்கிருந்த சுண்டெலி ஒன்று எழுந்தது. நாம் எதிர்பாராத நேரத்தில் பூனை நம் மீது பாய்ந்து பிடித்துக் கொள்கிறது. நம்மால் தப்பிக்க முடியவில்லை. பூனை வருவது நமக்கு முன்னரே தெரிந்தால் நாம் அதனிடமிருந்து தப்பிக்க முடியும்.
Cat


நாம் எப்படியாவது முயன்று பூனையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டிவிட்டால் போதும். அது வரும் போதெல்லாம் மணி ஓசை நமக்குக் கேட்கும். நாம் வளைக்குள் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொள்ளலாம். பூனையால் நம்மைப் பிடிக்கவே முடியாது என்றது.

ஆ! அருமையான திட்டம். இனி அந்தப் பூனையால் நம்மைப் பிடித்துத் தின்ன

முடியாது என்று பல எலிகள் அந்தச் சுண்டெலியைப் பாராட்டின.

திட்டம் நல்ல திட்டம்தான். அதை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கல் உள்ளதே என்றது கிழ எலி ஒன்று.

பூனையின் கழுத்தில் மணி கட்டப் போவது யார்? நீங்களா அல்லது திட்டத்தைச் சொன்ன சுண்டெலியா? நம்மால் பூனையின் அருகே சென்று உயிருடன் திரும்ப முடியுமா? இயலாத செயலுக்கு ஏன் இப்படி ஆரவாரம் செய்கிறர்கள்? என்றது அது.
அப்பொழுதுதான் மற்ற எலிகளுக்கும் பூனையின் கழுத்தில் மணி கட்டுவது இயலாத செயல் என்பது புரிந்தது.

எல்லா எலிகளும் தலையை கவிழ்த்தன. ஆனால் ஒரு இளம் எலி மட்டும் ஒரு யோசனை கூறி பூனையின் கழுத்தில் மணியைக் கட்டியது. அதை கேட்டு வியந்த மற்ற எலிகள் இந்த எலியின் புத்திக் கூர்மையை மெச்சின. அடுத்தநாள் பூனை வரும்போது மணியோசை கேட்டது. எலிகள் ஓடி ஒளிந்தன. பூனைக்கு ஏமாற்றம், அதன் பின், பூனையால் அந்த வீட்டில் ஓர் எலியைக்கூட பிடிக்க முடியவில்லை. அந்த எலியின் யோசனையை உங்களால் கூற முடியுமா?

விடை:

அந்த இளம் எலி இரவு நேரத்தில் பக்கத்து மருந்துக்கடையிலிருந்து தூக்க மாத்திரைகளை எடுத்து வந்து, பூனை குடிக்கும் பாலில் அவற்றைப் போட்டது. பின்பு பூனை அயர்ந்து தூங்கும்போது மணியைக் கட்டியது.
Previous
Next Post »