அக்டோபர் 1 முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு செல்லலாம் - தமிழக அரசு
இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் முழுவதுமாக ஆன்லைன் முறைக்கு மாறிவிட்ட நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் வீடியோ முறையில் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் வீடியோ மற்றும் ஆன்லைன் மூலம் எடுக்கக்கூடிய பாடங்களின் தரமானது நேரடியாக வகுப்பில் கற்பதற்கு இணையாக இருக்காது என்று தொடர்ச்சியாக கல்வியாளர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
அதேவேளையில் மத்திய அரசும் செப்டம்பர் 21ம் தேதி முதல் பெற்றோர்களின் சம்மதத்துடன் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு சென்று பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை பெறலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தது. இந்த முறை பல மாநிலங்களில் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது.
அதன் வரிசையில் தமிழக அரசும் பொதுத்தேர்வு எழுதக்கூடிய10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு நேரடியாக சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது.
50% மாணவர்கள் மற்றும் 50% ஆசிரியர்களும் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளை மட்டுமே திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
இரண்டு பிரிவுகளாக வகுப்புகளை பிரித்து நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது.